செல்லமே

உன்னைப் பிரிந்தே எந்தன்
உள்ளம் வாடுதே - பிரிவின்
தூரம் அறிந்தும் உன்னைத்
துரத்தித் தேடுதே

செல்லம் நிறை சொற்களாலே
கொஞ்சும் ராசாத்தி - என்னைக்
கனவில் கூடச் சுத்தி வரும்
செல்வச் சீமாட்டி

நட்சத்திரக் கண்கள் எந்தன்
பகலை இரவாக்கும் ‍- அகல‌
நெற்றிநடுக் குங்குமச் சூரியன்
பகலில் நிலவாகும்

காதல் நிறை கண்களாலே
கதைகள் உரைப்பாயே - அதனைக்
கற்றுக்கொண்டு சீண்டயில் அழகு
காட்டிப் பழிப்பாயே

நெடுநாள் பிரிவை உடனே போக்க‌
விடுமுறை நாடுகிறேன்
விடுப்புகள் முடிந்து
வேலைக்கு மீள்கையில்
நோய்நொடி தேடுகிறேன்

புற்கள் நுனிப் பனித்துளி போல
நானும் வருவேனே - எந்தன்
பாசம் கொண்ட ரோசாவே நீ
வாடிப் போகாதே